சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.022   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.022 திருவாலியமுதனார் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
மையல் மாதொரு கூறன் மால்விடை
   யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
   கண்டன் கனன் மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
   நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
   யுள் ளிடங் கொண் டனவே.

[1]
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
   முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
   யார்தில்லை யம்பலவன்
புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
   தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே.

[2]
குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
   போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
   மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாமலை யான்மகள்தொழ
   ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே. 

[3]
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
   மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
   மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
   வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
   யேனைத் தளர்வித்ததே. 

[4]
பந்த பாச மெலாம்அ றப்பசு
   பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
   யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
   திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.

[5]
குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
   தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
   தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
   காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே. 

[6]
படங்கொள் பாம்பணை யானொ டுபிர
   மன்ப ரம்பர மாவரு ளென்று
தடங்கை யால்தொழ வுந்தழல்
   ஆடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும் அத் தோள்க ளுந்தட
   மார்பினிற் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்டமன்றே வினை
   யேனை மெலிவித்தவே. 

[7]
செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு
   தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்
   தாடுசிற் றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக்
   காதும் காதினின் மாத்தி ரைகளோ
டைய தோடுமன்றே அடி
   யேனை ஆட் கொண்டனவே. 

[8]
செற்று வன்புரந் தீயெழச்சிலை
   கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி
   நீர்த்தில்லை யம்பலவன்
மற்றை நாட்ட மிரண்டொ டுமல
   ருந்திரு முகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சு
   ளேதிளைக் கின்றனவே.

[9]
தொறுக்கள் வான்கம லம்ம லருழக்
   கக்க ரும்புநற் சாறு பாய்தர
மறுக்க மாய்க்கயல்கள் மடை
   பாய்தில்லை யம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
   அவ்வ கத்துமொட் டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியா
   தென்னுள் நின்றனவே.

[10]
தூவி நீரொடு பூவ வைதொழு
   தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
   தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
   கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
   யான் அடி மேவுவரே.

[11]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.023   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
   படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
   துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
   டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
   தழல்மெழு கொக்கின்றதே. 

[1]
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும்
   அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
   நிறையழிந் திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
   திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
   படுந்தொறும் அலந்தேனே. 

[2]
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே
   அணிதில்லை நகராளீ
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
   தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
   உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
   வந்தருள் செய்யாயே.

[3]
அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
   அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
   பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
   சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
   ஒண்ணுதல் வைத்தோனே.

[4]
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
   மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
   எழில்மறை யவற்றாலே
செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய
   தில்லையம் பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
   பதைபதைப் பொழியாதே. 

[5]
தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை
   அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
   கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
   அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
   மனத்தினை யுடையேற்கே. 

[6]
உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
   உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
   ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
   யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
   உள்ளுவ தறியேனே. 

[7]
அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும்
   ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும்
   உடன்பிறந் தவரோடும்
பிரிய விட்டுனை யடைந்தனன் ஏன்றுகொள்
   பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன்
   மாநட மகிழ்வானே.

[8]
வான நாடுடை மைந்தனே யோஎன்பன்
   வந்தருளாய் என்பன்
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
   பால்வண்ண னேஎன்பன்
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
   திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண் அணி மார்பனே
   எனக்கருள் புரியாயே. 

[9]
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
   பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
   தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
   மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
   தடியிணை பணிவாரே. 

[10]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.024   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
   ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
   காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
   பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
   தேவன் ஆடுமே.

[1]
அன்ன நடையார் அமுத மொழியார்
   அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த
   சிற்றம் பலந்தன்னுட்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
   புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண
   விகிர்தன் ஆடுமே. 

[2]
இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
   ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
   வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
   அழகன் ஆடுமே. 

[3]
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
   சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
   உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
   சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
   நாதன் ஆடுமே.

[4]
ஓமப் புகையும் அகிலின் புகையும்
   உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தெழிலார் எடுத்த பாதம்
   மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
   தேவன் ஆடுமே.

[5]
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
   குவிந்த கரைகள் மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
   மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை யேந்தி
   அழகன் ஆடுமே.

[6]
சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
   தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
   என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
   முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
   குழகன் ஆடுமே.

[7]
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
   அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
   ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
   பரமன் ஆடுமே. 

[8]
மாலோ டயனும் அமரர் பதியும்
   வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
   என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
   பரமன் ஆடுமே. 

[9]
நெடிய சமணும் மறைசாக் கியரும்
   நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி
   யவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடையகோலக்
   குழகன் ஆடுமே. 

[10]
வானோர் பணிய மண்ணோர் ஏத்த
   மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
   சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
   சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
   பாவம் நாசமே. 

[11]

Back to Top
திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
9.025   திருவாலியமுதனார் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கோல மலர்நெடுங்கட் கொவ்வை
   வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
   மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
   என்றுகொல் காண்பதுவே. 

[1]
காண்பதி யானென்றுகொல் கதிர்
   மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
   தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
   யோன்மலர்ப் பாதங்களே. 

[2]
கள்ளவிழ் தாமரைமேற் கண்
   டயனோடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
   வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
   வனையு ணர்வரிதே. 

[3]
அரிவையோர் கூறுகந்தான் அழ
   கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
   தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
   யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்றஎம்
   பிரான்என் இறையவனே.

[4]
இறைவனை என்கதியை என்னு
   ளேயுயிர்ப் பாகிநின்ற
மறைவனை மண்ணும்விண்ணும் மலி
   வான்சுட ராய்மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம்இறையை நினைத்
   தேன்இனிப் போக்குவனே.

[5]
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
   லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
   யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
   கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
   மாநகர்க் கூத்தனையே. 

[6]
கூத்தனை வானவர்தங் கொழுந்
   தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
   லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
   தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
   பிரான்அடி சேர்வன்கொலோ. 

[7]
சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
   ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
   நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
   பிரான்போல் நேசனையே.

[8]
நேசமு டையவர்கள் நெஞ்சு
   ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
   ணுதலைக் காமருசீர்த்
தேச மிகுபுகழோர் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
   இறைவன்என் றேத்துவனே.

[9]
இறைவனை ஏத்துகின்ற இளை
   யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
   தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
   ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
   தேத்துக வான்எளிதே. 

[10]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool