9.022 திருவாலியமுதனார் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.022  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தி யதடங் கையன் கார்புரை யுங்கறைக் கண்டன் கனன் மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை யம்பலத்தான் செய்யபாதம் வந்தென் சிந்தை யுள் ளிடங் கொண் டனவே.
| [1] |
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை யம்பலவன் புலம்பி வானவர் தான வர்புகழ்ந் தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற் சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
| [2] |
குருண்ட வார்குழற் கோதை மார்குயில் போல்மி ழற்றிய கோல மாளிகை திரண்ட தில்லைதன்னுள் திரு மல்குசிற் றம்பலவன் மருண்டு மாமலை யான்மகள்தொழ ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
| [3] |
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை யச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தட மல்குசிற் றம்பலவன் சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்னூல் தன்னினொடு தாழ்ந்த கச்சதன்றே தமி யேனைத் தளர்வித்ததே.
| [4] |
பந்த பாச மெலாம்அ றப்பசு பாச நீக்கிய பன்மு னிவரோ டந்தணர் வணங்கும் அணி யார்தில்லை யம்பலவன் செந்த ழல்புரை மேனியுந் திகழுந் திருவயிறும் வயிற்றினுள் உந்தி வான்சுழிஎன் உள்ளத் துள்ளிடங் கொண்டனவே.
| [5] |
குதிரை மாவொடு தேர்ப லகுவிந் தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு மதுர வாய்மொழி யார்மகிழ்ந் தேத்துசிற் றம்பலவன் அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம் பயில் கூத்தன் மேல்திகழ் உதர பந்தனம்என் னுள்ளத் துள்ளிடங் கொண்டனவே.
| [6] |
படங்கொள் பாம்பணை யானொ டுபிர மன்ப ரம்பர மாவரு ளென்று தடங்கை யால்தொழ வுந்தழல் ஆடுசிற் றம்பலவன் தடங்கை நான்கும் அத் தோள்க ளுந்தட மார்பினிற் பூண்கள் மேற்றிசை விடங்கொள் கண்டமன்றே வினை யேனை மெலிவித்தவே.
| [7] |
செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்ய நின்று மகிழ்ந் தாடுசிற் றம்பலவன் செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக் காதும் காதினின் மாத்தி ரைகளோ டைய தோடுமன்றே அடி யேனை ஆட் கொண்டனவே.
| [8] |
செற்று வன்புரந் தீயெழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன் எற்றி மாமணிகள் எறி நீர்த்தில்லை யம்பலவன் மற்றை நாட்ட மிரண்டொ டுமல ருந்திரு முகமும் முகத்தினுள் நெற்றி நாட்டமன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.
| [9] |
தொறுக்கள் வான்கம லம்ம லருழக் கக்க ரும்புநற் சாறு பாய்தர மறுக்க மாய்க்கயல்கள் மடை பாய்தில்லை யம்பலவன் முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த அவ்வ கத்துமொட் டோடு மத்தமும் பிறைக்கொள் சென்னியன்றே பிரியா தென்னுள் நின்றனவே.
| [10] |
தூவி நீரொடு பூவ வைதொழு தேத்து கையின ராகி மிக்கதோர் ஆவி யுள்நிறுத்தி யமர்ந் தூறிய அன்பினராய்த் தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக் கூத்த னைத்திரு வாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடை யான் அடி மேவுவரே.
| [11] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.023  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர் படரொளி தருதிரு நீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழற்றிருச் சடையுந் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட் டிருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு கொக்கின்றதே.
| [1] |
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந் திருப்பேனைச் செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே.
| [2] |
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த தேவதே வீசனே உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை உயிர்செக உதைகொண்ட மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற வந்தருள் செய்யாயே.
| [3] |
அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்காமோ? திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை சேர்த்திஅச் செய்யாளுக் குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.
| [4] |
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார் எழில்மறை யவற்றாலே செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய தில்லையம் பலத்தானைப் பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப் பொழியாதே.
| [5] |
தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத் தரன் ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை யுடையேற்கே.
| [6] |
உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும் உண்பதும் பலிதேர்ந்து விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை ஆகிலும் என்னெஞ்சம் மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை யம்பலத் தனலாடும் உடைய கோவினை யன்றிமற் றாரையும் உள்ளுவ தறியேனே.
| [7] |
அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும் பிரிய விட்டுனை யடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின் மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன் மாநட மகிழ்வானே.
| [8] |
வான நாடுடை மைந்தனே யோஎன்பன் வந்தருளாய் என்பன் பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ண னேஎன்பன் தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூண் அணி மார்பனே எனக்கருள் புரியாயே.
| [9] |
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர்போற்ற எரிய தாடும்எம் ஈசனைக் காதலித் தினைபவள் மொழியாக வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி பரவல் பத்திவை வல்லவர் பரமன தடியிணை பணிவாரே.
| [10] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.024  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதிலின் றில்லைக் கருளித் தேவன் ஆடுமே.
| [1] |
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுட் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
| [2] |
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல் திளையும் மாடத் திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின் றளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
| [3] |
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண் டுந்தி யிழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச் சிந்திப் பரிய தெய்வப் பதியுள் சிற்றம் பலந்தன்னுள் நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.
| [4] |
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில்தோயத் தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள் வாமத் தெழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத் தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
| [5] |
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த அரவம் ஆட அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
| [6] |
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை அத்தா அருளாய் அணிஅம் பலவா என்றென் றவர் ஏத்த முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக் கொத்தார் சடைகள் தாழநட்டம் குழகன் ஆடுமே.
| [7] |
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று துதித்து மறையோர் வணங்குந் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
| [8] |
மாலோ டயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின் றால கண்டா அரனே யருளாய் என்றென் றவரேத்தச் சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் பாலா டும்முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
| [9] |
நெடிய சமணும் மறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச் செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் அடிக ளவரை ஆரூர் நம்பி யவர்கள் இசை பாடக் கொடியும் விடையும் உடையகோலக் குழகன் ஆடுமே.
| [10] |
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும் தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம் பலத்தானைத் தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே.
| [11] |
Back to Top
திருவாலியமுதனார் திருவிசைப்பா
9.025  
திருவாலியமுதனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கோல மலர்நெடுங்கட் கொவ்வை வாய்க்கொடி யேரிடையீர் பாலினை யின்னமுதைப் பர மாய பரஞ்சுடரைச் சேலுக ளும்வயல்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் தேலுடை எம்மிறையை என்றுகொல் காண்பதுவே.
| [1] |
காண்பதி யானென்றுகொல் கதிர் மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென் றறி தற்கரி தாயவனைச் சேண்பணை மாளிகைசூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறை யோன்மலர்ப் பாதங்களே.
| [2] |
கள்ளவிழ் தாமரைமேற் கண் டயனோடு மால்பணிய ஒள்ளெரி யின்னடுவே உரு வாய்ப்பரந் தோங்கியசீர்த் தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒரு வனையு ணர்வரிதே.
| [3] |
அரிவையோர் கூறுகந்தான் அழ கன்எழில் மால்கரியின் உரிவைநல் லுத்தரியம் உகந் தான்உம்ப ரார்தம்பிரான் புரிபவர்க் கின்னருள்செய் புலி யூர்த்திருச் சிற்றம்பலத் தெரிமகிழ்ந் தாடுகின்றஎம் பிரான்என் இறையவனே.
| [4] |
இறைவனை என்கதியை என்னு ளேயுயிர்ப் பாகிநின்ற மறைவனை மண்ணும்விண்ணும் மலி வான்சுட ராய்மலிந்த சிறையணி வண்டறையுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம்இறையை நினைத் தேன்இனிப் போக்குவனே.
| [5] |
நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம லத்திரளை நினைப்பார் மனத்தினு ளேயிருந்த மணி யைமணி மாணிக்கத்தைக் கனைத்திழி யுங்கழனிக் கன கங்கதிர் ஒண்பவளம் சினத்தொடு வந்தெறியுந் தில்லை மாநகர்க் கூத்தனையே.
| [6] |
கூத்தனை வானவர்தங் கொழுந் தைக்கொழுந் தாய்எழுந்த மூத்தனை மூவுருவின் முத லைமுத லாகிநின்ற ஆத்தனைத் தான்படுக்கும் அந் தணர்தில்லை யம்பலத்துள் ஏத்தநின் றாடுகின்ற எம் பிரான்அடி சேர்வன்கொலோ.
| [7] |
சேர்வன்கொ லோஅன்னைமீர் திக ழும்மலர்ப் பாதங்களை ஆர்வங் கொளத்தழுவி அணி நீறென் முலைக்கணியச் சீர்வங்கம் வந்தணவுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் தேர்வங்கை மான்மறியன் எம் பிரான்போல் நேசனையே.
| [8] |
நேசமு டையவர்கள் நெஞ்சு ளேயிடங் கொண்டிருந்த காய்சின மால்விடையூர் கண் ணுதலைக் காமருசீர்த் தேச மிகுபுகழோர் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் தீசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன்என் றேத்துவனே.
| [9] |
இறைவனை ஏத்துகின்ற இளை யாள்மொழி யின்தமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந் தேத்துசிற் றம்பலத்தை அறைசெந்நெல் வான்கரும்பின் அணி ஆலைகள் சூழ்மயிலை மறைவல வாலிசொல்லை மகிழ்ந் தேத்துக வான்எளிதே.
| [10] |